மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி – வெல்லாவெளி வீதி ஓரத்தின் பட்டிருப்பு பாலத்தை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய நீர் நிரம்பிய குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை(12) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி கிராமத்தின் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பேரின்பராசா பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர் செலுத்திச் சென்றதாக கருதப்படும் துவிச்சக்கர வண்டியையும் பொலிசார் அவ்விடத்திலிருந்து மீட்டுள்ளனர்.
குறித்த நபர் சனிக்கிழமை இரவு களுவாஞ்சிகுடியிலிருந்து கோவில்போரதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எனவும், அவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர் எனவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில களுவாஞ்சிகுடி - வெல்லாவெளி பிரதான வீதியோரத்தில் அமைந்துதள்ள நீர் நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடைப்பதாக அறிந்த களுவாஞ்விகுடி பொலிசார் இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பி.பிறேமநாத் அவர்களின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: