News Just In

6/10/2022 11:41:00 AM

சாணக்கியன் மீது விசாரணையை கோரவேண்டியிருக்கும் - பிரதமர் ரணில் எச்சரிக்கை!







கடந்த மே 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட்ட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


இந்த கருத்தின் மூலம், சாணக்கியன், நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால், குமார வெல்கமவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அந்த கருத்து பொருந்தாது என்று ரணில் குறிப்பிட்டார்.

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.
எனவே அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை திரும்பப்பெறவேண்டும்.
இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.


No comments: