News Just In

6/24/2022 06:18:00 AM

மன உளைச்சலில் அரச ஊழியர்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

நாட்டில் அரச திணைக்களங்களில் உள்ள உயர் அதிகாரிகள் அரச ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டும் என யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் (23-06-2022) பத்திரிகைகள் ஊடாக அறிந்திருந்தோம் கே.கே. எஸ். வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என்று.

அத்துடன், ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகள் வெளியாயின. பெற்றோல் பாங்க் முன்பாகவும் இந்த விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் திடீரென பிரதேச செயலாளர் அங்குவந்து இன்று எரிபொருள் வழங்க முடியாது.

எங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்த நிலையில், பிரதி மேயரான நானும் அவ்விடத்திற்கு வந்தேன். இதையடுத்து, அரச அதிபருடன் தொலைபேசியில் உரையாடினேன்.

இதன்படி உரிய பொறிமுறையை பின்பற்றவில்லை. திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை. சரியான நடவடிக்கைகள் செய்யப்படும் நிலையில் தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அறியவந்தது.

குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வந்த அரச ஊழியர்கள் கூறிய தகவலின் படி இன்று கடமைக்கு செல்லாது விடுமுறையை அறிவித்துவிட்டு பெற்றோல் நிரப்ப வந்துள்ளனர் என தெரியவந்தது.

எரிபொருள் விநியோகம் சரியான பொறிமுறையில் பின்பற்றாத காரணத்தால் பொதுமக்களும் அரச ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் அரச ஊழியர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடியில் நெகிழ்வுத் தன்மையை பின்பற்றி செயல்பட வேண்டும்.

பொருளாதாரம் சம்பந்தமாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக வீதியில் அதிக நேரத்தை செலவு செய்வதோடு கடமைகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அரச ஊழியர்கள் தங்களுடைய கடமை நேரங்களை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அரச ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, பொருட்களுக்கு தட்டுப்பாடு என்பவற்றை சமாளிப்பதோடு பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரச உயர் அதிகாரிகளுக்கும் அரச ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஆகவே அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் அரச ஊழியர்களின் நிலையை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: