News Just In

6/30/2022 07:37:00 PM

50 வருடகால கணவு நனவாகியது, இலவச ஆயுள்வேத நடமாடும் சேவை ஆரம்பித்து வைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்பலகாமம் பிரதேச மக்கள் ஆயுள்வேத வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து, அப்பிரதேச மக்கள் பயனடையும் வகையில் முற்றிலும் இலவச ஆயுள்வேத நடமாடும் சேவை ஒன்றினை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்ரன் அனெஸ்ரினின் ஒழுங்கமைப்பில் நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நடமாடும் சேவையில், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜி.சம்பிக்க பண்டார மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சுதேச மருத்துவத் திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.நவேந்திரராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

கடந்த பல வருடங்களாக தம்பலகாமம் பிரதேச மக்கள் ஆயுள்வேத வைத்திய சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக பல கிலோ மீற்றர் தூரமுள்ள கந்தளாய் பிரதேசத்திலுள்ள வெண்டராசபுர ஆயுள்வேத வைத்தியசாலைக்கோ அல்லது திருகோணமலை கப்பல்துறை ஆயுள்வேத வைத்தியசாலைக்குச் சென்றுவர வேண்டியதொரு துர்பாக்கிய நிலைமைக்குள்ளாகி வந்தனர்.

குறிப்பாக, இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பாரியதொரு பொருளாதார சவால் நிலைமைக்கு மத்தியில் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடிதாவர்களாக இருந்த அம்மக்களுக்கு இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கிக்கொடுத்த கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளருக்கும், தம்பலகாமம் தவிசாளருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆயுள்வேத நடமாடும் வைத்திய சேவையில் வைத்தியர்களான சமில் கருணாரத்ன, ரீ.கௌரிஸ்வரன், எ.ரி.எப்.முஸாபிறா, ஆகியோர்கள் கலந்துகொண்டு வைத்தய சிகிச்சைகளை வழங்கியதுடன் அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸ்மாயில் 

No comments: