News Just In

4/07/2022 06:18:00 AM

மர்மமான முறையில் இடம்பெற்ற இரட்டை கொலை : ஹம்பாந்தோட்டையில் சம்பவம்!

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாகன விபத்தில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக உண்மைகளை மூடி மறைக்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாமடல பிரதேசத்தில் மாடுகள் இரண்டை அழைத்துச் செல்ல வந்த இருவருக்கும் மாட்டு உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி அங்குனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கூறியது போன்று மாமடல - ரத்னவீர பாலத்திற்கு அருகில் விபத்து ஏதும் இடம்பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

No comments: