கிழக்கு மாகாணத்தில் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.
சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 22.02.2022 மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண ஆளுனர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்காலத்தில் சேதனப் பயிர் உற்பத்தியை மேற்கொண்டு அதன் தரத்தை பரிசோதனை செய்வதற்கு இரசாயன ஆய்வு கூடங்களை கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அதன் மூலம் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்களை வழங்கவுள்ளோம். மேற்படி நடவடிக்கைக்காக 1000 மில்லியன் ரூபா நிதி 3 மாவட்டங்களுக்கும் வழங்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.
விவசாயிகள் தங்களது மண்ணின் தரம் மற்றும் சேதனப்பசளையின் தரத்தை உறுதி செய்ய ஆய்வு கூடங்கள் நிறுவப்படவுள்ளது’ என்றார்.
மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜே. முத்துபண்டா, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் கிழக்கு மாகாண விவசாய ஆணையாளர் கலாநிதி எஸ்.எம். ஹுஸைன்;> கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா இராணுவ உயர் அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் கூடவே விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இரசாயன பசளை பாவனையின்றி சேதனப் பசளை பயன்படுத்தி பயிர்ச் செய்கை மூலம் சாதனை படைத்த விவசாயிகள் மற்றும் நிறுவனங்களை சார்ந்த நிருவாகிகளும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு காசோலையும் சிறந்த விவாசாயி என்ற நினைவுச் சின்னங்களும் ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments: