News Just In

1/15/2022 12:51:00 PM

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியால் உயர்ச்சி பெற வேண்டும் - இராஜாங்க வியாழேந்திரனினால் பல திட்டங்கள் முன்னெடுப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டமானது கடந்த 30 வருட காலமாக கடந்த கால யுத்தம், சுனாமி உள்ளிட்ட இன்னோரன்ன இயற்கை அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக இருந்துவருகின்றது.

அதற்கு அமைவாக உயிர்களையும், உடமைகளையும் இளந்த மாவட்ட மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது, கல்வி ரீதியாகவும் பாரிய இளப்புக்களை சந்தித்து கல்வி நிலையில் பின்னோக்கி செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

படிப்படியாக மாவட்டத்தின் கல்வி நிலை உயர்ந்து வந்தாலும், கல்வியின் ஊடாட பாரிய மாற்றத்தை மாவட்டம் அடைவதாயின், மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் பாரியளவில் வளப்பற்றாக்குறையும், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பற்றாக்குறையும் நிவர்த்திக்க வேண்டிய தேவைப்பாடு இருந்தவண்ணமே இருக்கின்றது.

மாவட்டத்தில் தமிழ் சமூகம் மென்மேலும் உயர்ச்சியடைந்து பொருளாதார ரீதியாகவும் ஏனைய துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தை அடைவதாயின் அவற்றிற்கெல்லாம் மூல காரணமாக கல்வியில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே இவை சாத்தியம் என தனக்குள் எண்ணப்பாடைக் கொண்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களது அரசாங்கத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறுபட்ட, பல மில்லியன் பெறுமதியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையினை காணமுடிகின்றது.

நாடு பூராகவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 48 உயர் தொழில்நுட்ப பீடங்களில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கபடவேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு இராஜாங்க அமைச்சரின் முயற்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டிட தொகுதி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே வேளை இன்றைய அரசாங்கத்தினால் மாவட்டத்திலுள்ள ஐந்து வலயங்களிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், நவீனமயப்படுத்தலும் இடம்பெறுகின்றது. அது மட்டுமல்லாது பின்தங்கிய பௌதீக வள பற்றாக்குறை அதிகமாக காணப்படும் கல்வி வலயத்தில் தேவை முன்னிலைப்படுத்தல் அடிப்படையில் பாடசாலைகளை இனங்கண்டு வரும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அண்மையில் கல்குடா மற்றும் மண்முனை மேற்கு போன்ற கல்வி வலயங்களில் காணப்படும் பல பாடசாலைகளுக்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன், பல பௌதீக வள பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்துள்ளார்.

அத்தோடு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் பாடசாலையில் நூலக வசதி காணப்பட்டதை அறிந்துகொண்ட இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பேறாக, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதலாவது தொலைக்காட்சி மற்றும் புத்தகங்களை உள்ளடக்கிய பேரூந்து நூலகத்தை அம்பிளாந்துறை கலைமகள் கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.

இலங்கையில் பேரூந்து நூலகங்களை பாடசாலைகளுக்கு கையளிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் இடம் பெற்றுவந்த நிலையில் அதன் அடிப்படையில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டிலும் அமுணுகம அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் முன்வைத்த முன்மொழிவின் பயனாக குறித்த நூலகப் பேரூந்து கிடைக்கப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையின் நிருவாகமும், மாணவர்கள் உட்பட கல்விசார் சமூகமும் இதனை பெற்றுக்கொடுத்தமைக்காக இராஜாங்க அமைச்சரிற்கும் அரசாங்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

அதே வேளை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் இராஜாங்க அமைச்சர் அண்மையில் பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ஒவ்வொரு மாணவனுக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் வெறும் பரீட்சைகள் மாத்திரம் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது, ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் துறை சார்ந்து வழிகாட்டலுடன் நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். இது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கின்றது. ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தனது வாழ்க்கையில் 24000 மணித்துளிகள், 13 வருடத்தில் பள்ளியில் ஆசிரியர்களுடன் கல்வியறிவை பெற பயணிக்கின்றார்கள். 

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தான், மாணவர்களது, இளமைக்காலத்தை சிற்பமாக செதுக்கி, அவர்களது தனித்திறனை கண்டுணர்ந்து, அதை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறார்கள். ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, உயர் நிலை பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மேல் நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களது ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், ஆசிரியர்கள் தங்களது அறிவால், நல் ஒழுக்கத்தால், மாணவர்களை ஈர்த்து, மாணவர்கள் தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

ஆக மாணவர்களது முதல் நம்பிக்கை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தான் என்பதே உண்மை. ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு செல்லும்போது அந்த தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் மாத்திரமே உயர்தர வகுப்புகளுக்கு தெரிவாகின்றனர். ஏனையோர் கல்வி நிலையை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் அவை சிறந்த கொள்கை திட்டத்தின் கீழ்பின்தங்கிய பிரதேசங்களை விஸ்தரிக்க படவில்லை. எதிர்காலத்தில் அனைத்து மாணவரும் ஏதேனும் ஒரு துறையில் அரசாங்கத்தின் உதவியோடு பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர வழி வகுக்கப்படும் என்றும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வழிகாட்டலுடன் மாணவர் சமுதாயத்தினருக்கு தொழிற்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கு மின்னியல் இலத்திரனியல் பொருளியல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேம்படுத்த கல்வி அமைச்சின் உயரிய நோக்கத்துடன் உயர் தொழில்நுட்ப பீடம் (கட்டிட தொகுதி) அமைக்கப்பட உள்ளது. 

இந்தக் கற்கை நெறிகள் ஊடாக எதிர்காலத்தில் மாணவர் சமுதாயத்தினருக்கு சர்வதேச ரீதியிலான உயர் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வித் தகைமை உடைய சமுதாயமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்படவுள்ள தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப பீடங்களினூடாக மாணவர் மத்தியில் மின்னியல் இலத்திரனியல் , பொறியியல் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பத் திறனை கல்வி நடவடிக்கைகளுடன் மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதெனவும், இந்த கற்கை நெறிகளின் ஊடாக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் பல தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உளதாகவும், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவே ஆளணி பற்றாக்குறையும் மிக விரைவாக தீர்த்துவைக்கப்படும், மட்டக்களப்பு மாவட்டம் கல்வியால் உயர்ச்சி பெற வேண்டும் அதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் ஒத்துழைப்பினையும் நான் எமது மாவட்டத்திற்காக வழங்குவேன் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.










No comments: