News Just In

12/08/2021 06:29:00 PM

காடுகளை அழித்து பயிர் செய்ய கேட்கவில்லை : முறையாக வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்யவே கேட்கிறோம்!


நாட்டில் அனேக மாவட்டங்களில் யானைகள் , மனித மோதல்கள் உருவாகி மக்கள் பல இழப்புகளை சந்தித்து வருகின்ற நிலையில் , காடுகளும் யானைகளும் அவசியமானது தான் ஆனால் அவைகள் நாட்டில் உள்ள காடுகளின் அளவிற்கு ஏற்ப யானைகளின் எண்ணிக்கையை முறையாக பாதுகாத்து மக்களையும் வாழ வைக்க அமைச்சு ஒரு சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அக்கரைப்பற்று DRO அலுவலகம் தனிப்பிரிவாக இயங்கிய காலத்தில் அரசாங்க அதிபரால் முறையாக வழங்கப்பட்ட காணிகள் , அவ்வலுவலகம் பின்னர் நான்கு பிரிவுகளாக பிரிந்த பின்னர் திருக்கோயில் பிரதேச எல்லைக்குள் இருந்த வட்டமடு பிரதேச காணிகளின் ஆவணங்கள் திட்டமிட்டு தீயிட்டு அழிக்கப்பட்டு யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து மீண்டதன் பின்னர் அக்காணிகளில் அம்மக்கள் தங்களின் செய்கை நடவடிக்கைகளை செய்ய முடியாமல் இருப்பதையும் , தடுக்கப்படுவதையும் அமைச்சரும் பிரதி அமைச்சரும் இவ்விடயம் சார்ந்த ஏனைய அமைச்சுக்களும் சேர்ந்து நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையான இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து விவசாயம் செய்ய ஆவணைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வட்டமடு , பொத்துவில் பிரதேச சர்ச்சைக்குரிய காணிகள் விடயம் சம்ந்தமாக கடந்த மாதம் (நவம்பர்) 01ம் திகதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியதுடன் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டது. எனவே புதிதாக நாங்கள் காடுகளை அழித்து பயிர் செய்ய கேட்கவில்லை. அரசாங்க அதிபரால் முறையாக வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்கை செய்ய ஆவணம் செய்ய கேட்டுக்கொண்டார்.

மாளிகைக்காடு நிருபர்

No comments: