News Just In

12/12/2021 06:36:00 PM

40 நாடுகளைச் சேர்ந்த 566 பேர் கலந்து கொண்ட போட்டியில் சாதித்த இலங்கையர் !

நூருல் ஹுதா உமர்
கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அம்பாரை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் கலந்துகொண்டு ஓடி தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தினையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

அல்ட்ரா ரன்னர் (ULTRA RUNNER) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டார் விளையாட்டுகளுக்கான அனைத்து சம்மேளனம் (Qatar Sports for All Federation) அணுசரணையுடன் மேற்படி மரதன் ஓட்டப் பந்தயம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் 151 பேரும், குழுக்களாக ஓடுவதற்குரிய பட்டியலில் 415 பேருமாக 40 நாடுகளைச் சேர்ந்த 566 பேர் கலந்து கொண்டனர்.

இதில் அம்பாரை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சொந்த இடமாகவும், மருதமுனையைத் திருமண உறவாகக் கொண்டவருமான மீராசா றெளசான் என்பவர், தனித்து ஓடுவதற்கான பட்டியலில் கலந்துகொண்டு முழுமையாக 90 கிலோமீற்றர் தூரத்தையும் ஓடி தன் இலக்கை நிறைவு செய்தார். ஒவ்வொரு வருடமும் கட்டார் நாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பங்குபற்றியமை இதுவே முதல்தடவையாகும்.
போட்டியில் கலந்து கொண்ட மேற்படி இலங்கையருக்கு கட்டாரின் இலங்கைக்கான தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: