தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இந்நிலையில் பாதீட்டுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசியக் கட்சி, சிறிவங்கா சுதந்திரக் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுயேட்சை குழு ஆகியவற்றைச் சேர்ந்த15 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்களில் 7பேர் வாக்களித்ததுடன், ஒருவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார். இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான சபையின் பாதீடு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.
No comments: