News Just In

10/23/2021 04:37:00 PM

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளின் படி, இதுவரையிலும் இலங்கையில் டெல்டா பிளஸ் பரவி இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் இது பரவ ஆரம்பித்தால் இதை 100% தடுக்க முடியாது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொற்றுநோய் பரவல் ஆரம்பமாகியது முதல், இலங்கையில் பரவி வரும் கொவிட் -19 வைரஸின் பிறழ்வுகளை அடையாளம் காண்பதற்காக வைத்தியர் ஜீவந்தரவின் வழிகாட்டலின் கீழ் ஆய்வக அடிப்படையிலான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனைகளின் படி இலங்கையில் பரவுகின்ற அல்பா மற்றும் டெல்டா வகைகள் தொடர்பான தகவல்கள் இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றில் பி .1.617.2.28 என்ற மூன்று புதிய பிறழ்வுகளைக் கொண்ட டெல்டா வகை முக்கியமாக இலங்கையின் மேல் மாகாணத்தில் பரவியது என்று வைத்தியர் ஜீவந்தர குறிப்பிட்டார்.

பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களால் இந்த திரிபடைந்த வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான  சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அல்பா பி 1.411 என்ற பிறழ்வும் இன்னும் சமூகத்தில் உள்ளது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார். இதேவேளை கொரோனாத் தடுப்பூசியின் மூலம் உடலில் அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்திகள் உருவாகின்றமையும் தெரியவந்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments: