News Just In

7/10/2021 07:19:00 AM

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானம- இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்...!!


காணொளி- https://youtu.be/F-T33_3f0SI
அரசாங்கத்தின் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுகின்ற அடக்குமுறையான செயற்பாடுகளை கண்டித்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமது பொதுச் செயலாளர் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று மீண்டும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இது சுயாதீன நீதிச் சேவையினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விடயமாகும்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதற்குப் பின்பும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தியிருப்பதென்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். சுயாதீன ஆசிரியர் சேவைகள் சங்கம் சுயாதீன நீதிச் சேவையை வலியுறுத்தி முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீயானி பண்டாரநாயக்கா அம்மையார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டின் பல பாகங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

மாணவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குரல்கொடுத்து வந்திருக்கின்றது. இந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்தை நியாயப்படுத்தியே எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார். கடந்த காலங்களில் சடஸ்கோர்க்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தமையின் நிமித்தம் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

சுயாதீன கல்விக் கொள்கையில் இலவசக் கல்வியை நாங்கள் விலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டில் இலவச சுகாதாரம், இலவசக் கல்வி என்பன மிக முக்கிய பங்குகளாகும். இலவச சுகாதாரம் எமது நாட்டில் இருந்தமையினாலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய கொவிட் சூழ்நிலையில் பல உயிர்களைக் காக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது இலவச சுகாதாரம் மற்றும் கல்வி என்பன அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

எமது பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தனிமைப்படுத்தல் சட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதானது இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயற்பாடாகும். இலங்கையில் இறையாண்மைக்கு இந்த சம்பவம் ஒரு சவாலாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஊடகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு எமது கருத்துச் சுதந்திரங்களும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

தற்போது ஜோன் கொத்தலாவல கல்வி நிலையத்தை ஒரு தனியார் கல்வி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே கடந்த காலங்களில் சைட்டம் என்ற தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சுயாதீன கல்வியை வலிறுத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கம் சேர்ந்து பல கவனயீர்ப்புப் போராட்ங்கள் மூலம் அழுத்தம் கொடுத்தமையினால் அது கைவிடப்பட்டது.

தற்போது நேற்யை தினம் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 982மாணவர்கள் குறிப்பிட்ட காலங்களில் 05-09-2009ல் இருந்து 15-05-2017 வரையும் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் அங்கு கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படுகின்றார்கள். எனவே இங்கு அந்த மாணவர்கள் இணைக்கப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இலவச சுகாதார சேவை மற்றும் கல்விச் சேவைக்கும் சவாலாக அமையும் என்பதாலேயே எமது பொதுச் செயலாளர் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலவசக் கல்வியை தொடர்ந்து கல்விக் கொள்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எமது கல்வி அமைச்சருக்கு உள்ளது. அவரும் ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில் கல்வி உயர்கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராவார். ஆனால் தற்போதைய விடயங்களில் அவர் மௌனமாக இருப்பதையிட்டு நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

1981ம் அண்டு கொத்தலாவல பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படடிருந்தது. அங்கு 2020-2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைப்பது தொடர்பில் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட பாடநெறிகளே சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் மருத்துவ பிரிவிற்குட்பட்ட பாடநெறிகள் உள்ளடக்கப்படவில்லை. தற்போது நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட தீர்மானத்தில் மருத்துவத் துறையைiயும் உள்ளடக்கியதாக பாடவிதானங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது கடந்த காலத்தில் தடுக்கப்பட்ட சைட்டத்தின் பெரும்பாலான மாணவர்களை இணைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது இலவசக் கல்விக்குப் பெரும் சவாலான விடயமாகும்.

இதே போன்று ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கும் இது ஒரு அடிகோளாக இருக்கும் விடயமாகும் என்பதற்காகவே இதனை நாங்கள் எதிர்த்துப் போராட்டங்கள் நடாத்துகின்றோம். எனவே இந்த அரசு இதற்குப் பொறுப்புக் கூறுவதோடு உடனடியாக தனிமைப்படுத்தல் சட்டம் மூலம் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் எமது தோழர்களை விடுவிக்க வேண்டும். எங்கள் குரல்களை ஒடுக்க முற்படின் சிறந்த கல்வியாளர்களும், கல்விமான்களும் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும்.

கல்விபுலத்தில் உள்ளவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களுக்கு எதிரான நாங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் முன்னெடுத்துவந்த இணையவழி கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.இது தொடர்பான தீர்மானத்தினை மத்திய குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.

இலவச கல்வியை மாணவர்களுக்கு கொண்டுசெல்லவேண்டிய காலகட்டத்தில் இந்த அரசாங்கத்தின் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுகின்ற அடக்குமுறையான செயற்பாடுகளை கண்டித்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளோம்.

No comments: