News Just In

7/17/2021 06:56:00 AM

கொரோனா தொற்று காரணமாக சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து- எச்சரிக்கும் வைத்தியர்...!!


இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 490 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறே கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து இதுவரை கொவிட் காரணமாக 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், பிள்ளைகள் நோய் நிலைமைக்கு ஆளாகக் கூடிய ஆபத்து நிலைமை காணப்படுவதால், பெற்றோர் மிகவும் அவதானமாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளுமாறு விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய மேலும் கோரியுள்ளார்.

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உடனே கொரோனா அறிகுறிகள் வெளிக்காட்டாமல் இரு வாரங்கள் கடந்த பின்னர் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, கண்கள் சிவத்தல், வாந்தி போன்ற நிலைமைகள் ஏற்படும்.

இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானித்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் மேலும் கோரியுள்ளார். இந்த நிலைமைகளின் காரணமாக உள் உறுப்புகள் வீக்கமடைய வாய்ப்புள்ளதாகவும், இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு உள்ளான ஐந்து சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நோய் அறிகுறிகளால், சிறுவர்கள் உயிரிழக்கக்கூடிய நிலைமை உருவாக வாய்ப்புகள் இருப்பதால் பெற்றோர் மற்றும் வளர்ந்தோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.

No comments: