News Just In

4/26/2021 11:24:00 AM

மட்டக்களப்பில் கிராமியப் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் வியாபாரத்தை வலுப்படுத்தும் மாபெரும் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்!!


"கிராமியப் பெண்களின் பொருளாதாரததிற்கு கைகொடுப்போம்" எனும் கருத்திட்டத்தின் கீழ் சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அந்தஸ்தினை வலுப்படுத்தும் முகமாக காவியா நிறுவனம் கூட்டுறவு சுயதொழில் அபிவிருத்தி சங்கங்களுடன் இணைந்து 13வது தடவையாக நடாத்தும் மாபெரும் கண்காட்சியும் விற்பனை தொழில் சந்தையும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காவியா சுய தொழில் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து காட்சிக்கூடங்களை பார்வையிட்டார்.

சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவிச் செயலாளர் ச.நவேஸ்வரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுய தொழில் முயற்சியாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டடிருந்ததுடன், இதில் நஞ்சற்ற மரக்கறிகள், கடலுணவு உற்பத்திப் பொருட்கள், ஆடை வகைகள், பழ மரங்கள், கைப்பணிப்பொருட்கள் என்பன பல்வேறுபட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியானது கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக இடம்பெறாத போதிலும் இவ்வாண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொலிஸ் பாதுகாப்புடன் தொடர்ச்சியாக இரு தினங்கள்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments: