News Just In

4/02/2021 04:41:00 PM

சமூக இணக்கப்பாடுகளை வழிபாட்டு தலங்களின் தலைமைகள் ஏற்படுத்த வேண்டும் ; எஸ்.எம் சபீஸ்!!


(நூருள் ஹுதா உமர்)

எமது மக்களிடையே குடி வழிமுறைகளும், மரபு சம்பிரதாயங்களும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஆதிவழி ஒற்றுமையைக் காட்டுவதாக அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்களின் தலைவரும் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரியபள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (02) நடைபெற்ற பெரும்குடமுழக்கு வைபவத்தில் விசேட அழைப்பிதழின் பேரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,அவர் இவ்வாறு குறிப்பிடார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; ஆதிவழி உறவில், தமிழர்களும் முஸ்லிம்களும் ஏதோவொரு பிணைப்பில் உள்ளனர். இதனால்தான் திராவிடர் கலாசாரத்தின் சில மரபுகள் இன்றும் முஸ்லிம்களிடம் காணப்படுகின்றன .1620 ஆம் ஆண்டுகளில் போர்த்துகேயரின் அட்டுளியங்களின் பின்னர் இடம்பெறும் 25 வது மகாகும்பாபிசேகம் நடைபெறும் இக்கோவில் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலுக்கு அத்திவாரமிட்ட அதே நாளில்தான், இந்த ஆலயத்திற்கும் அடிக்கல் நடப்பட்டது என இதிகாசங்கள் கூறுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் பெரியபிள்ளையார் பெரியபள்ளி என்ற வாசக கற்கள் பாரம்பெரியங்களை சுமந்து நிற்கின்றது.

மனிதனின் நேர்வழிக்கு மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. எல்லோருக்கும் பொதுவான இறைவன் விரும்புவதையே ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு, வேதாந்தங்களில் விளக்குகின்றன. இந்த மதங்களைத்தான் இன்று சிலர், அரசியலுக்காகவும் வேறு தேவைகளை அடைந்து கொள்ளவும் பிரித்தாள எத்தனிக்கின்றனர். இவர்களின் இந்தச் செயற்பாடுகளைத் தோற்கடிக்க இவ்வாறான ஒன்றுபடல்கள் உதவும் எனவும் .எனது பாடசாலைத் தோழர் ரவி இங்கே இருக்கிறார்.ஒரு காலத்தில் நானும், அவரும் வகுப்புக்குச் சென்றுவிட்டு பனங்காடு வரை நடந்து செல்வதுண்டு. அந்த அன்னியோன்ய நாட்கள்,1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அகன்றுவிட்டது. அந்த நாட்கள் மீண்டும் வராதா? என்ற ஏக்கம் எம் இரு சமூகங்களிடமும் இருப்பது எனக்குத் தெரியும். இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர்,1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்த அச்சம் போய்விட்டது.நாம் எல்லோரும் அச்சமின்றிக் கலந்து வாழும் புதிய சூழலை நமது வழிபாட்டுத்தலங்கள் ஏற்படுத்த வேண்டும். எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய ஆலையடிவேம்பு பிதேசசபை தவிசாளர் உண்மையிலேயே இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் போது எமது சமூகங்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்கு இக்கோவில் அத்திவாரம் இட்டுள்ளதாக கோவிலின் தர்மகத்தாக்களுக்கு நன்றி தெரிவித்தார்







No comments: