News Just In

3/15/2021 08:21:00 PM

போதைப் பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் சிவில் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை- பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட்!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் போதைப் பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் சிவில் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அதன் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

நாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பிரதான மொத்த வியாபாரிகளை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது. இது வெளியில் தெரியாது. அதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அத்தோடு சிறிய வியாபாரிகளை இல்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய போது மட்டக்களப்புக்கு விசேட குழுவை வழங்குவதாக தெரிவித்தார்.


பிரதேசத்தில் காணப்படும் திணைக்களங்கள் தங்களது வேலைத் திட்டங்களை எமக்கு வழங்குங்கள். நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீடுகளை கொண்டு வந்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம். ஐந்து வருடத்தில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் நிலையில் இங்கு போதிய வசதிகள் இல்லாமல் உள்ள நிலையில் கனரக வாகனம், மின்பிறப்பாக்கி, தண்ணீர் வசதி என்பவற்றை வழங்கி உதவுமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர் கேட்டுக்கொண்டார்;.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் காணப்படும் திணைக்களங்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுகளை தரப்படுத்தி வைக்கும் வகையில் சபையினால் இலகுவாக கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக அமையும். எனவே இதனை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இதன் போது மீன்பிடிப் பிரச்சனை, யானைப் பிரச்சனை, டெங்கு பிரச்சனை உட்பட்ட பல பிரச்சனைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன், இவற்றுக்கான வேலைத் திட்டங்களை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக சபையில் தெரிவிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.றுவைத், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, திணைக்கள அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
















No comments: