ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மரபுரிமை ஆவணங்களை டிஜிடல் நவீன தொழிநுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம் பௌண்டேசன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி மட்டக்களப்பு மாவட்ட கலாசார கூடத்தில் கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றச் சாதனங்கள் ஏடுகள் பண்டைய தொன்மை ஆவணங்கள் மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகள் வியாழக்கிழமை 25.06.2020 மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டன.
நூலகம் பௌண்டேசன் நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளைப் பணிப்பாளர் சொக்கலிங்கம் பிரசாத் இதனைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கலாமதி, எதிர்கால சந்ததியினர் எமது பண்டைய காலத்து வரலாறுகளை அறிந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளது.
இதனை செயல்படுத்த முன்வந்த ஆர்வலர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி செய்பவர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நமது கலாசார முறைகள் ஏனைய ஆக்கங்கங்கள் டிஜிடல் கட்டமைப்பில் ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்றார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ். ஜெய்னுலாப்தீன் உட்பட அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.














No comments: