
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை சுகாதார நடைமுறையின் கீழ் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய உற்சவ காலத்தில் 50பேர் மட்டுமே அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசத்து கோயில் என்ற பெயர்பெற்ற வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜுலை 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் வகையிலான கூட்டம் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆலய வண்ணக்கர்கள்,மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன்,உதவி பிரதேச செயலாளர் அருணன்,இந்துக்கலாசார உத்தியோக்த்தர்,பொலிஸ் உயர் அதிகரிகள்,கிராம சேவையாளர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஆலய வளாகத்திற்குள் எதுவித வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லையெனவும் ஆலய வளாகத்திற்குள் மக்கள் ஒன்றுகூடவதற்கு அனுமதி வழங்குவதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆலயத்தின் உற்சவத்தினை ஊடகங்கள் ஊடாக ஒளிபரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
No comments: