
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அபிவிருத்தி என்பது வெறுமனே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியாகக் கருத முடியாது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அரசும் தனியார்துறையும் இணைந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி திவா ஹோம் கட்டிட நிர்மாண கலை நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை செவ்வாய்க்கிழமை 25.02.2020 திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எமது சமூகத்திற்கு பூரண அபிவிருத்தி இடம்பெற வேண்டுமாயின் தனியார் துறையினரின் வளர்ச்சியும் இணைந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் பல்வேறு சவால்களைத் தாண்டி கட்டட நிர்மாணத் துறையில் சாதனை படைத்துள்ள இந்நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் இது போன்ற பல்வேறு துறைகளிலும் தனியார் துறையினர் திறமைகளை காண்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கு எமது மாவட்ட வர்த்தகர்களும் தொழில் முயற்சியாளர்களும் அக்கறை காட்ட வேண்டும்' என்றார்.
திவா ஹோம் கட்டிட நிர்மாண கலை நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம். திவாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி. சரவணபவான், மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. கெட்டியாராச்சி, மட்டக்களப்பு மறைக்கோட்ட குரு முதல்வர் அடிகளார் தேவதாசன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.






No comments: