News Just In

11/08/2019 07:16:00 AM

இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதியால் திறக்கப்படவுள்ளது

இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (08.11.2019) பத்தரமுல்ல, பெலவத்த அக்குரேகொட பகுதியில் திறக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் ,இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளினுடைய தலைமையகங்கள் ஒரே நிலையத்தில் அமைப்பதற்காக 77 ஏக்கர் பரப்பில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 மார்ச் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டிட நிர்மாணத் திட்டம் இதுவாகும். அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த கட்டிடத்தொகுதி கொண்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் நாளை ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தலைமை அலுவலகங்கள் விரைவில் இந்த கட்டிடத்தொகுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியனுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

No comments: