நூருல் ஹுதா உமர்
கடந்த 06.08.2026 அன்று இடம்பெற்ற வெளிவாரி மதிப்பீட்டின் மூலம் சிறப்பான உச்ச புள்ளிகளைப் பெற்ற கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளின் தரத்தை மதிப்பிடும் வகையில் நடைபெற்ற வெளிவாரி மதிப்பீட்டில் பாடசாலைக்கு மிகச் சிறப்பான பெறுபேறு கிடைத்தது. இந்தச் சாதனைக்குப் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரின் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் குழு முயற்சி முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக, வெளிவாரி மதிப்பீட்டிற்கான முன்னேற்பாடுகள், கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளில் ஆசிரியர்கள் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இக்கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் ஆசிரியர்களுக்கான நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
அவரது பங்கேற்பும் ஆசிரியர்களை நேரடியாகப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியமையும் நிகழ்வுக்கு சிறப்பையும் பெறுமதியையும் சேர்த்ததுடன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது.
பாடசாலையின் இச்சிறப்பான பெறுபேறு, எதிர்கால கல்விச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உந்துசக்தியாக அமையும் எனவும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments: