கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாணவர்களின் நடைமுறைத் திறனையும், புதுமையான தொழில்நுட்ப சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட உயிர்வாயு உற்பத்தி அலகிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உயிரியல் வாயு உத்தியோகபூர்வமாக பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஏ.எம். ஆசிர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தரம் 12 தொழில்நுட்பவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களான தௌசீப், ரிஸாப், ஆகிப் மற்றும் அதீப் ஆகியோரின் செயற்பாட்டு பங்களிப்புடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் தொழில்நுட்ப பீடத்தின் பகுதித் தலைவர் எம்.எச். அன்ஸாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸீல் உயிர்வாயு அலகை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து, அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உயிர் வாயுவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப பீட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் தரம் 12 தொழில்நுட்பவியல் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த உயிர்வாயு அலகு கழிவுப் பொருட்களை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் சூழல்நட்பு தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக, மாற்று எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதற்கான அறிவையும் அனுபவத்தையும் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
பாடப்புத்தகங்களில் கற்றுக்கொள்ளும் கோட்பாட்டு அறிவை நடைமுறைச் செயற்பாடுகளுடன் இணைத்து, மாணவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன், பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் மற்றும் குழு அடிப்படையிலான செயற்பாட்டு திறன்களை வளர்க்கும் கல்வி அணுகுமுறைக்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
No comments: