News Just In

6/27/2026 05:38:00 PM

உலக சுற்றாடல் தினம்: கல்முனை சாஹிரா கல்லூரியில் மரநடுகை, விழிப்புணர்வு நிகழ்வுகள், மாணவர்கள் கௌரவிப்பு

உலக சுற்றாடல் தினம்: கல்முனை சாஹிரா கல்லூரியில் மரநடுகை, விழிப்புணர்வு நிகழ்வுகள், மாணவர்கள் கௌரவிப்பு


நூருல் ஹுதா உமர்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிரா கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜபீர் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக 2026 ஜூன் 25 ஆம் திகதி தேசிய மரமான நாகமரம் நாட்டப்பட்டு சுற்றாடல் பாதுகாப்பிற்கான உறுதிமொழியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் கவிதை, உரை, விழிப்புணர்வு நாடகம், ஆதிவாசி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்ற செய்தியை மாணவர்கள் கலைநிகழ்வுகள் ஊடாக வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை கல்வி வலய கல்வி நிர்வாகப் பிரதி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜபீர், கல்வி அபிவிருத்திப் பிரதிப் பணிப்பாளர் எம்.எச். ரியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்மா மலிக், சுற்றாடல் பிரிவுப் பொறுப்பாளர் ஐ.எம். மவ்சூர், சுற்றாடல் உத்தியோகத்தர் பி. செல்வகுமரன், முன்னாள் சுற்றாடல் பொறுப்பாசிரியர் ஐமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்சீல், இணைப்பாடவிதான உதவி அதிபர் எஸ். முபாரக், சுற்றாடல் மன்ற ஆசிரியர்களான ஏ.எல்.எம். அசீம், யு.எல்.எம். முபீஸ், ஏ.எம். ஆஸிர், எம். ஹசன், என். கிஷோ, ஏ.எப். பர்வீன், இசட்.எம்.எப். சமீரா, எஸ்.எப். சஜீஹா சஹ்ரான், பி. புவினீதன், ஏ.டபிள்யூ. ரைஸா பார்வீன் உள்ளிட்ட ஆசிரியர்கள், சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் மற்றும் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றனர்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சுற்றாடல் முன்னோடி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் சிறப்பாக அமைந்தது.

No comments: