அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜு (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் பின்னர் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக மீட்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர் மேற்கொண்டுள்ளார்.
இந்த திடீர் உயிரிழப்பு வளத்தாப்பிட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments: