
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த மே 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து, அவரது சட்டத்தரணிகள் வைத்திய அறிக்கைகளுடன் பிடியாணையை மீளப் பெறுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், சந்தேகநபர் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டு பிடியாணையை மீளப் பெற முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை உள்ளபடியே நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தில் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து, நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விளம்பர நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சியின் உருவம் மற்றும் அரசியல் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 12,000 ரி-ஷர்ட்டுகள் (T-shirts) அச்சிட, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (SLTPB) ரூ. 7.8 மில்லியன் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் முன்னிலையாகாது வெளிநாட்டில் உள்ளமையினால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ய சர்வதேச பிடியாணை பெற வேண்டுமாயின் சத்தியக்கடதாசியை தாக்கல் செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் பசான் அமரசேன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: