சாய்ந்தமருது நகர சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால மக்கள் கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னணியாக இருந்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் அப்போதைய நிர்வாகிகள், பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர், முன்னாள் பொருளாளர் உள்ளிட்ட அப்போதைய மரைக்காயர் சபையினர், தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து பாராட்டி கௌரவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான நகர சபை அமைப்பு தொடர்பான அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதாக கருதப்படும் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் முயற்சிகளை நினைவுகூர்ந்து, அவருக்கு இதன் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களும், சமூக அழுத்தங்களும், அரசியல் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளும் இணைந்து, இறுதியில் நகர சபை அமைப்பிற்கு வர்த்தமானி அறிவித்தல் வழிவகுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நிர்வாகிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் மக்கள் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் எனவும் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசியல் தலைமைகளுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
No comments: