
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்ஷ சகோதரரை நாட்டுக்கு அழைத்து வர சிவப்பு பிடியாணை பிறப்பிப்பேன் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும், இல்லையேல் அந்த சொத்துக்கள் நீதிமன்றம் மூலம் அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
2022 இல் வங்குரோத்து நிலையடைந்த நாட்டை தாங்களே பொறுப்பேற்றதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி பற்றி கருத்து தெரிவிப்பது வேடிக்கையானது என்றார். எதிர்க்கட்சிகளின் ஒன்றுக்கூடல்கள் அரசாங்கத்திற்கு சவாலாக அமையாது என்றும் தெளிவுபடுத்தினார்.
நிலக்கரி கொள்வனவு குறித்த குற்றச்சாட்டுகளை ஆராய விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
No comments: