
இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் பல புதிய விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தி வருகின்றது.
அதற்கமைய, வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி ரூபாவின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், வாகன இறக்குமதி சுங்க வரியின் மீதான கூடுதல் கட்டணத்தை 50 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
டொலர் கையிருப்பு பெருமளவில் செலவிடப்படும் இறக்குமதித் துறைகளை இனங்கண்டு, அவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் வெளிநாட்டுச் கையிருப்பைப் பாதுகாப்பது குறித்து அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதன் நேரடி விளைவாக, எதிர்வரும் வாரங்களில் ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் வேகமாக உயரக்கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழல் மற்றும் உர நெருக்கடி காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் இந்தியா சீனி ஏற்றுமதியை அவசரமாகத் தடை செய்துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவையடுத்து, உள்நாட்டு சீனி இறக்குமதியாளர்கள் தற்போது தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற மாற்றுச் சந்தைகளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குப் போதுமான சீனி இருப்பு தற்போது நாட்டில் உள்ளதாக புறக்கோட்டை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
No comments: