
ஈரான் தாக்குதலில் ஏழு வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. ஈரானும் பதிலடியாக 7 வளைகுடா நாடுகளில் உள்ள அமெ ரிக்க ராணுவ முகாம்களைக் குறி வைத்து ஏவுகணை, மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் சிலர் இறந்தனர். அமெரிக்க ராணுவ முகாம்களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள், ஓடு தளங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.
அமெரிக்காவின் வான் பாதுகாப்பையும் மீறி ஈரானின் பழமையான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க ராணுவ முகாமுக்குள் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்டகன் முழுமையாக பகிரவில்லை. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அமெரிக்காவில் ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே கோபம் அடைந்துள்ளனர்.
சேத விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து பல வாரங்கள் ஆகியும், அது பற்றி எதையும் கூறாமல் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் என பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தாண்டு ராணுவ பட்ஜெட்டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்றம் 838.5 பில்லியன் டாலர் அனுமதி அளித்திருந்தது.
ஈரான் போர் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் 11 பில்லியன் டாலர் செலவானதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேதம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. இவற்றை சரிசெய்ய பல ஆயிரம் கோடி செலவாகும்’’ என்றனர்.
No comments: