News Just In

3/20/2026 07:05:00 AM

மாணவி கழுத்தில் அணிந்திருந்த ‘விசில்’ - அவசர அவசரமாக அகற்றிய அதிகாரிகள்

மாணவி கழுத்தில் அணிந்திருந்த ‘விசில்’ - அவசர அவசரமாக அகற்றிய அதிகாரிகள்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் பிரிவினர் கோவை மாவட்டம் சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மகளிர் மட்டும் ஓட்டளிக்கும் வகையிலான மாதிரி வாக்குச்சாவடியை மாணவியர் அமைத்திருந்தனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாநகராட்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது கோலாட்டம் நிகழ்வில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, சக மாணவியருக்கு நடன அசைவுகளை சொல்லித் தர, மாணவி ஒருவர் கழுத்தில் விசில் அணிந்திருந்தார்.

கோலாட்டம் ஆடத் தொடங்கியதும், மாணவி கழுத்தில் அணிந்திருந்த விசிலை ஊதிய பின்னர், அடுத்தடுத்த ஸ்டெப்புகள் அமைத்து நடனமாடினர். விசில் - தவெக கட்சியின் சின்னம். வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்வில் மாணவி கழுத்தில் விசில் அணிந்திருப்பதை எதிர்பார்க்காத மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர், அவசரமாக மேடை மீது ஏறி, மாணவி கழுத்தில் அணிந்திருந்த விசிலை அகற்றினார். இதனால் மாணவிகள் குழப்பம் அடைந்த நிலையில், பயிற்சி அளித்த ஆசிரியர் தொடர்ந்து ஆடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து மாணவிகள் கோலாட்டத்தை தொடர்ந்தனர்.

No comments: