நூருல் ஹுதா உமர்
இலங்கைக்கு அதிகளவில் நெல்லுத்பத்தி வழங்கும் அம்பாறை மாவட்டம் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பரந்தளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பல இடங்களில் முற்றாக சேதமடைந்துள்ளன. அறுவடை செய்த நெல்லையும் உலர்த்த முடியாமல் முளைவிடும் நிலைக்கு நெல்லும் மாறியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு இது தொடர்பில் ஏத்திவைக்க வேண்டியுள்ளதுடன் அரசாங்கம் உடனடியாக அவசர நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்து, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமைகளை தற்காலிகமாக தளர்த்துதல், விதை மற்றும் உர உதவிகளை மீள வழங்குதல், மற்றும் அடுத்த பருவத்திற்கான செய்கையை முன்னெடுக்க விசேட உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் அம்பாறை மாவட்ட மக்களின் முதன்மை வாழ்வாதாரமாக காணப்படுகின்ற சூழலில், உடனடி அரசாங்க தலையீடு அவசியம் என்றும், இல்லையெனில் இது மாவட்டத்தின் பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலை உருவாகும் என்றும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா எச்சரித்துள்ளார்.
No comments: