இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.
இதையடுத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சிறீதரன் பதவி விலகாது விடின் அவர் விலகும் வரை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை கட்சி நீக்கும் என்று அரசியல் குழு முடிவு எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அரசியல் குழு அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை. இதனையே நான் மக்களுக்கும் கூறுகிறேன் என்று சிறீநேசன் எம். பி.தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அண்மையில் களுவாஞ்சிக்குடியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் கருத்து வெளியிட்ட போதே நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்கும் முடிவு அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
No comments: