
மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று (06) மீட்டுள்ளனர்.
38 ஆர் பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளினால் இவ்வெடிபொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என படையினர் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக தோண்டும் போது மர்மப் பொருள்கள் தென்படுவதனை அவதானித்து வாகரை விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து அதிரடிப் படையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வெடிபொருட்கள் உள்ளதை உறுதிப்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து மீட்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆர்பிஜீ மோட்டார் குண்டுகள் கைக்குண்டுகள் சார்ஜர்கள் என்பனவும் மீட்கப்பட்டன.
கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் இட்டு நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன.
அடைமழை செய்துகொண்டிருந்த வேளை தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏஎம்ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார ,அம்பந்தனாவெளி கிராமசேவகர் சீ.கஜேந்திரன்,வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் மீட்பு நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டன.
No comments: