News Just In

12/04/2025 05:48:00 PM

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் நாட்டில் குவியும் உதவிகள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் நாட்டில் குவியும் உதவிகள்



இலங்கையை மீள கட்டியெழுப்பும் நிதியத்திற்கு 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணம் செலுத்தியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி வரை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க வெளிநாட்டு இலங்கையர்கள் ஒரு வாய்ப்பை கோரியுள்ளதாகவும், நிதி அமைச்சு மற்றும் பிற அரசு நிறுவனங்கள் அவர்கள் சார்பாக இரண்டு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சூரியப்பெரும கூறியுள்ளார்.

முதல் திட்டத்திற்கமைய, வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்பு கணக்கு எண் அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது திட்டத்தின் கீழ், குறைந்த ஆவணங்களுடன் மற்றும் எந்த கட்டணமும் இல்லாமல் பொருட்களை நாட்டிற்கு அனுப்பும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நிவாரணமாக அனுப்பப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்வு

இந்த திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு பணிக்குழு நிறுவப்பட்டுள்ளது.



இதன் காரணமாக நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களை எளிதாக விடுவிக்க முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை மையத்தின் பெயரில் பொருட்களை அனுப்புவதன் மூலம் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் எனவும் இது குறித்த மேலதிக தகவல்கள் ஏற்கனவே சுங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: