நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜென்-ஸீ இளைஞர்கள் கடந்த செப்டம்பரில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த போராட்டம் வேலையின்மை மற்றும் ஊழலுக்கு எதிராக திரும்பியது.
இளைஞர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள இயலாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நேபாளத்தின் இடைக்கால அரசு முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக அமைதி திரும்பிய நிலையில், கடந்த இரு நாட்களாக ஜென்-ஸீ இளைஞர்களுக்கும், சர்மா ஒலி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, பதற்றத்தை கட்டுப்படுத்த பாரா, சிமாரா பகுதிகளில் இரண்டாவது நாளாக மதியம் 1 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்க்கி கூறுகையில், “மார்ச் 25, 2026-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜனநாயக நடைமுறைகள் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். நாட்டை நிர்வாகம் செய்ய புதிய தலைமுறையினரிடம் ஆட்சியை ஒப்படைக்க விரும்புகிறோம்'' என்றார்.
No comments: