News Just In

11/21/2025 07:44:00 AM

சேலத்தில் டிச.4-ல் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு!


சேலத்தில் டிச.4-ல் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு!





 சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த செப்.27-ல் கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் காரணமாக, அவரது பிரச்சார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘வரும் டிச.4-ம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் தேர்தல் பிரச்சார கூட்டம் மூலம் மக்களை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த மனு மீது உடனடியாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பரிசீலைனை மேற்கொண்டனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவல நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதேபோல, டிச.6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டி, அடுத்து வரும் நாட்களில் மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

எனவே, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டும் என்பதால், விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு டிசம்பர் 4-ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. வேறொரு நாளில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார தேதியை மாற்றி வழங்கிடும்படி காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி, கட்சி நிர்வாகிகளை அனுப்பி வைத்தனர்.

No comments: