
மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார்.
அந்த பிரேரணையின்படி,
1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.
இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.
இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும் ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.
ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர் சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன்.
எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்.
இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.
No comments: