சமீப சில நாட்களாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதோடு அவற்றுக்கான தட்டுப்பாடும் கிராக்கியும் அதிகரித்துள்ளது. இதனால் அன்றாட சீவனோபாயத்தைக் கழிக்க முடியாமல் பல நடுத்தரக் குடும்பங்கள் அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.
கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் பொருட்களின் அசுர விலையேற்றத்தால் குடும்பஸ்தர்கள் தீர்வுக்கான வழி தெரியாமல் தடுமாறும் இக்கட்டான நிலைமை தோன்றியுள்ளது.
சிவப்புச் சீனியின் விலை ஒரு கிலோகிராம் 270 ரூபாவாக இருக்கின்ற அதேவேளை, சீனியின் விலையையும் மேவி, ஒரு கிலோகிராம் கல் உப்பு 300 ரூபாவாகவும் தூள் உப்பு 400 ரூபாவாகவும் விற்கப்படுகின்ற அதேவேளை, பல ஊர்களிலுள்ள கடைகளில் எந்தவிதமான உப்பும் விற்பனைக்கு இல்லாத தட்டுப்பாடும் நிலவுகிறது.
இது விடயமாக உப்பு வியாபாரிகளிடம் கேட்டபோது உப்பு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளிடமிருந்து உப்பைப் பெறமுடியவில்லை. அப்படி பெற்றாலும் அவர்கள் தரும் விலைக்கு உப்பை அங்கிருந்து ஏற்றிவந்து விற்று போக்குவரத்துச் செலவுகளைக் கூட ஈடு செய்ய முடியவில்லை என்கின்றனர்.
புளியம்பழம் ஒரு கிலோகிராம் 2500 ரூபாய் தொடக்கம் 3000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இஞ்சியும் இதேவிலைதான். மிளகாய் 2000 ரூபாய், நடுத்தரமான இறால் 3000 ரூபாய். சின்ன மீன்கள் தொடக்கம் பெரிய மீன்கள் வரை 1000 ரூபாவுக்குக் குறைவாக வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. தேங்காய் விலையும் 300 ரூபா என்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அசுர விலையேற்றத்தாலும் தட்டுப்பாட்டாலும் இல்லாத இயலாத மக்களின் வாழ்வு நிலை கேள்விக்குறியாக்கப்ட்டுள்ளது. பலர் நாளாந்த ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ள முடியாமல் அந்தரித்து பதற்றமடைந்துபோயுள்ளார்கள்.
இதுவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியிருக்காத இளைஞர் யுவதிகளும் குடும்பஸ்தர்களுமாக, இப்பொழுது வேறு வழியின்றி மத்திய கிழக்கு நாடுகளின் வேலை வாய்ப்பை நாடியிருப்பதாக சமூக நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்
No comments: