பிள்ளையானிடம் ஜேவிபி ஆயுதம் கேட்டிருந்தால் பிள்ளையான் அந்த காலத்திலேயே சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்திருக்கமுடியும்.அநுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பில் பிள்ளையானின் ஒட்டுக்குழு தொடர்பில் பேசியபோது பிள்ளையான் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வேடிக்கையான விடயமாகும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடக மையத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ”பிள்ளையானால் முடியுமானால் இன்று கூட சென்று யார் ஆயுதம் கேட்டது, எப்போது கேட்டது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யமுடியும்.
இப்போது பிள்ளையான் ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளார். ரணிலிடம் சென்று கூறி பொலிஸ் மூலம் இது தொடர்பில் விசாரணை நடாத்தமுடியும்.
இலங்கையில் சட்ட விரோதமாக யார் ஆயுதம் வைத்திருந்தாலும் அந்த ஆயுதங்கள் களையப்படவேண்டும்.பாதாள உலக குழுக்கள்,போதைப்பொருள் வியாபாரிகள் அழிக்கப்பட வேண்டும்.
தமிழ்-சிங்கள,முஸ்லிம் மக்கள் எந்தவித அச்சமின்றிய சூழ்நிலையில் பேதங்கள் அற்றுவாழும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.
No comments: