News Just In

4/27/2024 06:44:00 PM

தமிழ் தேசியத்துக்கு எதிராக பேரினவாதத்தின் அட்டூழியம்: துணை போகும் தமிழ் தலைவர்கள்!



மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பல்வேறு வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில் கிழக்கை மீட்பவர்கள் என்று கூறுபவர்கள் வாயளவில் பேசி அரசியலை செய்து தங்களுடைய பைகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (26.04.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “75 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது (ITAK) அசைக்க முடியாத சக்தியாக நிற்கின்றது. தமிழரசு கட்சியை அழிப்பதற்காக கடந்த காலத்தில் பேரினவாதமானது பல்வேறுபட்ட செயல்களை செய்துள்ளது.

மட்டக்களப்பில் வைத்து யோசப்பரராஜ சிங்கத்தை இந்த ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொண்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்த சந்திர நேரு அவர்களை சுட்டுக் கொண்டார்கள். கொழும்பில் வைத்து இளம் இரத்தமான ரவிராஜ் அவர்களை சுட்டுக்கொன்றார்கள்.

தமிழ்த் தேசிய உணர்வோடு பயணிக்கின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அத்தோடு அருட்தந்தையர்கள் ஆக இருக்கலாம். இவ்வாறான அனைவரையும் அழிப்பதன் மூலமாக தமிழ் தேசியத்தை வடக்கு, கிழக்கிலிருந்து கழுவி விட வேண்டும் என்கின்ற அடிப்படையில் பேரினவாதம் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.

இந்த வேளையில் எங்களுடைய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற குலத்தை கெடுக்கின்ற கோடரி கம்புகள் என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களோடு இணைந்து கூலிக்கு மாரடைத்து கொண்டு இருந்துள்ளார்கள்.
தமிழ் தேசிய அரசியல்

இன்று கிழக்கு இருப்பைப் பற்றி பேசுகிறார்கள் அதைவிட கிழக்கை மீட்டு தருவதாக கூறுகின்றார்கள். உங்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்திற்குள் நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய கிழக்கு மீட்பர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள்.

இப்போது மயிலத்தமடு மாதவனை பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குசலான மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற இருந்தது. குருந்தூர் மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. வடமுனையின் நெடியகல்மலை என்ற பகுதியிலும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தந்தை செல்வா பிழையான அரசியலுக்குள் அகப்படவில்லை. நேர்மையான அரசியலை செய்தவர். அவ்வாறான தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரையில்தான் தமிழ் தேசியம் இருக்கும். தமிழர்களின் அடையாளமும் இருக்கும்.

மேலும், அம்பாறையை ஆக்கிரமித்தவர்கள், திருகோணமலையை ஆக்கிரமித்தவர்கள் இன்று மயிலத்தமடுவினையும் கலாசார பூமி எனவும் ஆக்கிரமிக்கின்றார்கள். அதற்கு கிழக்கு மீட்பர்கள் ஒத்துழைத்து வந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: