News Just In

6/28/2023 01:52:00 PM

பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்!!


பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்!!



நூருல் ஹுதா உமர்.

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றனர்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப்பயணிகளின் surfing board களை சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர், இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு
வரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனாலேயே போக்குவரத்து பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை இன்று மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் இவர்கள், மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் surf board தாங்கிகளை அகற்றி வீதி விபத்துக்களிலிருந்து சுற்றுலாப்பயணிகளையும்,மக்களையும் பாதுகாத்து தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு செல்வதற்கு பொலிசார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிய மகஜர் ஒன்றை பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களிடம் கையளித்தனர்.

No comments: