News Just In

3/14/2023 11:42:00 AM

யுத்தத்தினை விட வீதி விபத்துகள் பயங்கரமானவை - 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி





(அபு அலா)
தற்போதைய காலகட்டமானது, வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் கால கட்டம் என்பதினால், இளைஞர்கள் வீதி விபத்துக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையாக செயல்பட வேண்டுமென இலங்கை இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 18வது விஜயபாகு காலாட்படையணி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர். உதித்த கலுஆராச்சி தலைமையில் (11) நடைபெற்ற இளைஞர் தன்னார்வ அணியின் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் :
தற்போது அதிக வீதி விபத்துகளில் இளைஞர் சமூகம் பாதிக்கப்பட்டு வருவது மன வேதனை தருகின்றது. குறிப்பாக தற்போதைய சாரதிகளிடம் சுய ஒழுக்கம் இல்லாத காரணத்தினால், வீதி விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் முந்தி சொல்ல வேண்டும், வாகனங்கள் ஓட்டுவதில் தங்களது வீரத்தினை நிரூபிக்க வேண்டும் என்ற நட்பாசையினால், இவ்வாறான வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், தற்காலத்தில் யுத்தத்தினை விட, வீதி விபத்துக்கள் பயங்கரமானவையாகக் காணப்படுகிறது.

மேலும் கடந்த 13 வருடத்திற்குள் நாட்டில் 68 ஆயிரம் பேர் வீதி விபத்தினால் இறந்துள்ளதுடன், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 03 லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 10 பேர் இந்த வீதி விபத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலும் சில பேர் மரணத்தினை தழுவுகின்றனர். இவ்வாறான நிலை எதிர்காலத்தில் மாற்றம் அடைய வேண்டும். இதற்கு இளைஞர்கள் ஒவ்வொருத்தரும் முன் வந்து, வாகனங்களை செலுத்தும் போது பாதுகாப்பான உரிய பொருட்களுடன் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அது மாத்திரமில்லாமல் தற்கால கட்டத்தில் இளைஞர்கள் அதிகமானோர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த விடயத்தில் போதைப்பொருளானது ஒரு சங்கிலித் தொடராக இளைஞர்களிடத்தில் உருவெடுத்து வருகின்றது. இதில் முதலீட்டாளர்கள், இறக்குமதி செய்வோர், விநியோகஸ்தர்கள், பாவனையாளர்கள் ஆகியோர்களை என நான்கு தரப்பினர் காணப்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு பாதுகாப்புத்துறைக்கு அறிவிக்க வேண்டும். இதனை இளைஞர்கள் சிந்திக்காத வரை போதையினை ஒழிக்க முடியாது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் போதைக்கு துணையாய் இருந்த ஒன்பது இராணுவ வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவம் என்பது ஒழுக்கம் நிறைந்த ஒரு படையாகும். அந்த படையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பினைப் பெற்று தொடர்ந்தும் நம்பிக்கையாக திகழும் என்றார்.

அத்துடன் இந்த செயலமர்வின் பின், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் அமையப்பெற்றுள்ள இராணுவ முகாமினை, பிறிதொரு இடத்திற்கு இடமாற்ற இளைஞர் தன்னார்வ அணையின் செயற்பாட்டாளரும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினருமான சுலைமான் நாஸிறூனினால் படைத்தளபதி அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், யோசனை கருத்திற் கொள்ளப்பட்டு, சாதகமான தீர்வினை வழங்கவுள்ளதாக படைத்தளபதி உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம் பரீட் மற்றும் இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


No comments: