News Just In

12/12/2022 07:09:00 AM

வாழைச்சேனை மீனவர்கள் சென்ற படகு ஹம்பாந்தோட்டை ஆழ்கடலில் விபத்து; ஒருவர் மீட்பு இருவர் மாயம்!

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற இயந்திரப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று மீனவர்கள் ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் மீன்பிடித்து விட்டு வாழைச்சேனை துறைமுகம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த படகு வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அன்றைய தினம் கடலில் ஏற்பட்ட கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்ட மீனவர் ஒருவர் வாழைச்சேனை துறைமுகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

தாம் பயணித்த படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவில்லை என்றும் தன்னை ஹம்பாந்தோட்டை மீனவர்கள் காப்பாற்றி அவர்களின் படகில் தற்போது பராமரிப்பில் வைத்துள்ளதாகவும் மீட்கப்பட்ட மீனவர் நேற்று (11) தகவல் வழங்கியுள்ளார்.

இவ் விபத்தில் காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட மீனவரை ஊருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: