இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாவரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபாவரை குறைவடைந்துள்ளது.
நாட்டில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது. எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
இதனால் பெருமளவான பயணிகள் தூர இடங்களுக்கு சொந்த வாகனங்களில் பயணிப்பதை கைவிட்டுள்ளனர், பொது போக்குவரத்தையே அவர்கள் தெரிவுசெய்கின்றனர்.
அதேவேளை மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்ப நிலையால் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடும் அமுலில் இருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments: