“எழுச்சி மிகு மாநகரம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி மற்றும் கொக்குவில் 'ஏ' வலய உப வீதி என்பன தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 3ம் வட்டார உறுப்பினர் க.ரகுநாதனின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
மாநகர சபையின் நிதி மூலமான வேலைகளை நேரடியாக மாநகர சபையின் ஆளணி வளங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவந்த போதிலும் கடந்த ஆண்டில் மாநகர சபையின் ஆணையாளர் சபையுடன் இணைந்து பணியாற்ற முன்வராமையால் ஒப்பந்தம் மூலமாக சில வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது மாநகர சபைக்கு என புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து மீண்டும் மாநகர சபையினால் நேரடியாக அபிவிருத்து பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதகவும் இதன் ஊடாக மேலதிகமாக 40 வீதத்துக்கும் அதிகமான வேலைகளை செய்யக்கூடியதாக இருப்பதோடு மேலும் ஓர் வீதியையும் அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு கையளிக்க கூடிய சந்தர்ப்பம் கிட்டுவதாகவும் இதன் போது மாநகர முதல்வர் தி.சரவணபவன் கருத்து தெரிவித்தார்.
சுமார் 400 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்களான க.ரகுநாதன், த.இராஜேந்திரன் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
No comments: