News Just In

5/20/2022 06:14:00 PM

எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் - பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன்

எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் மட்டக்களப்பு மக்களைப்பார்த்து உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரித்தவண்ணம் இருப்பதை கருத்திற் கொண்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் இன்று பாடசாலைகளுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்ககையைப் பொறுத்தவரையில் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனடிப்படையில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களுக்குள் 422 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், 2 இளவயது மரணங்களும் சம்பவித்துள்ளது, மட்டக்களப்பு நகர் பகுதியில் மாத்திரம் 240 பேர் டெங்கு நோயாளர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களை கள விஜயம் ஒன்றினூடாக பார்வையிட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களாக இதன்போது இனங்கண்ட பாடசாலை நிருவாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் எந்தவொரு உயர்வு, தாழ்வும் பாராது உச்சக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி இளையதம்பி உதயகுமார், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கள பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்று முன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: