News Just In

5/15/2022 12:52:00 PM

இலங்கையின் கஜானாவை டொலர்களால் நிரப்புவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

சிறிலங்காவின் கஜானாவை டொலர்களால் நிரப்புவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்காக பல நாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கைக்கு பெருமளவு கடனுதவியை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திய வங்கியின் கஜானா நிறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளும் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கைகளை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஏற்கனவே உடன்பட்ட கடன் தொகையை விட பல மடங்கு அதிகமாக வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சார்பில் கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரித்து, ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னர் இலங்கை கையிருப்பில் இருந்த டொலர்களின் மட்டத்திற்கு உயர்ந்து விடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: