News Just In

5/15/2022 12:44:00 PM

10 பேரை பலியெடுத்த அமெரிக்க நியுயோர்க் இனவெறி துப்பாக்கி சூட்டு சம்பவம்!

அமெரிக்க நியூயோர்க் மாநிலத்தின் அங்காடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இனவெறி தூண்டுதல் குற்றமாக இருக்குமா என்பது தொடர்பில் விசாரிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பஃபலோ நகரில் இராணுவ சீருடையை அணிந்திருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது வெறுக்கத்தக்க தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

இன ரீதியாக தூண்டப்பட்ட வெறுப்பு குற்றம் இந்த தேசத்தின் கட்டமைப்பிற்கு வெறுக்கத்தக்கது.

அத்துடன் வெறுக்கத்தக்க உள்நாட்டு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தை ஒரு வெறுப்புக் குற்றமாகவும், இனரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும், தாம் விசாரித்து வருவதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிதாரி, கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பஃபலோ நகர் பகுதியை அடைய பல மணி நேரம் வாகனத்தில் பயணித்துள்ளதாக நம்பப்படுகிறது.

இவரால் மொத்தம் பதின்மூன்று பேர் சுடப்பட்டனர். இதன்போது பலியானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர்களாவர். இதேவேளை தாக்குதலை நடத்தியவர், தாம் தாக்குதல் நடத்துவதை நேரடியாக ஒளிபரப்பும் புகைப்படக்கருவியை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாக்குதல்தாரியை சுட முயற்சித்த போதிலும், தாக்குதல்தாரியால் அவரும் கொல்லப்பட்டார்.

No comments: