News Just In

3/12/2022 01:25:00 PM

சௌபாக்கியா பல்வேறு வேலைத் திட்டங்கள் ஒரே நாளில் கையளிப்பு!



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகம் திறப்பு, சௌபாக்கியா வீடு கையளிப்பு, வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிகள், சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு அலுவலக பைகள் வழங்கும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீசா, மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான முகாமையாளர் கே.பகீரதன், பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான எஸ்.ஏ.எம்.பஸீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தியாவட்டவானின் அந்நூர் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், சௌபாக்கியா விசேட வீடமைப்பு திட்டத்தின் வாழைச்சேனை 206டீ பிரதேசத்தில் பயனாளி மற்றும் மக்கள் பங்களிப்புடன் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டடப்பட்ட வீடு உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு 2021ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிக்கு பால் கறக்கும் பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கான உறுப்பினர்களுக்கான அலுவலக பைகள் வழங்கப்பட்டதுடன், சமுர்த்தி பெறும் இரண்டு பயனாளிகள் வாழ்வாதாரம் உயர்வடைந்த நிலையில் சமுர்த்தி கொடுப்பனவு அட்டையை தாமாக முன்வந்து ஒப்படைத்ததுடன், சமுர்த்தி திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

சமுர்த்தி வங்கியின் புதிய மாற்றங்களுக்கு அமைவாக தற்போதைய காலத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பலம் பொருந்திய ஒரு அமைப்பாக செயற்படுகின்றன. இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஒரு கிராம சமுர்த்தி வங்கியாகவும் தற்போது செயற்படுகின்றன. அந்த அளவிற்கு இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பல அதிகாரங்களை சமுர்த்தி திணைக்களம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கிராம மக்களின் உடனடி தேவைகளுக்காக பணத்தினை கிராமத்திலேயே இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் வழங்குகின்றன. இது அநியாய வட்டிக்காரர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரு பாரிய திட்டமாகும். எனவே இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களை பலப்படுத்த கிராமங்கள் தோறும் அலுவலகங்கள் திறக்கப்பட்டும், அலுவலக பைகளும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது.






No comments: