News Just In

1/25/2021 12:04:00 PM

பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடைஞ்சலாக உள்ள வாகனப் போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்திற்கு தடை விதிப்பு!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடைஞ்சலாக உள்ள வாகனப் போக்குவரத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு தடைசெய்வதென ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவும் இணைந்து முடிவெடுத்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள எம்.எல். றெபுபாசம் தெரிவித்தார்.

ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தை அண்டியுள்ள வீதியால் பாடசாலை துவங்கும் நேரத்திலும் பாடசாலை கலையும் நேரத்திலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் பயணம் செய்ய வேண்டியுள்ள சந்தர்ப்பத்தில் வாகனங்களும் அவ்வீதியால் செல்வதால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகி;ன்றார்கள்.

அதன்காரணமாக பாடசாலை நிருவாகத்தினதும் பெற்றோரினதும் வேண்டுகோளுக்கேற்ப இவ்வீதி குறிப்பிட்ட நேரத்தில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டதாக றெபுபாசம் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை நாட்களில் காலை 7 மணி தொடக்கம் 7.45 வரையிலும் பிற்பகல் பாடசாலை கலையும் நேரமான 1.45 தொடக்கம் 2.30 வரையிலும் ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தை அண்டியுள்ள வீதி அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டிருக்கும் என அறிவித்தல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டபடி இவ்வீதியை வாகனப் போக்குவரத்திற்கு உத்தியோகபூர்வமாகத் தடை செய்யும் தீர்மானம் திங்கட்கிழமை 25.01.2021 அமுல்படுத்தப்பட்டு ஏறாவூர் நகர சபையால் வீதித் தடை அறிவித்தல் பலகைகள் இடப்பட்டன.

ஏறாவூர் நகர சபையின் தலைவர் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள எம்.எல். றெபுபாசம் உட்பட பாடசாலை நிருவாகத்தினரும் ஏறாவூர் போக்கு வரத்துப் பொலிஸாரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.







No comments: